ஈராக் தலைநகர் பக்தாத் மற்றும் பஸ்ராவில் தொடர் தாக்குதல்கள்: இராணுவ வானூர்தி நிலையத்தில் விழுந்த ஆளில்லா விமானம்…

ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் பஸ்ரா மாகாணங்களில் அடுத்தடுத்து தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.பக்தாத்தில் உள்ள இராணுவ வானூர்தி நிலையத்தில் ஆளில்லா வானூர்தி ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில், அங்குள்ள களஞ்சியசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்தச் சம்பவம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.இதற்கு முன்னதாக, பக்தாத் வானூர்தி நிலையத்திற்கு அருகில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தளவாட ஆதரவு மையத்தை நோக்கி ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பக்தாத்தின் மேற்கே உள்ள அபு கிரைப் பகுதியில் இருந்த வாகனமொன்றிலிருந்து இந்த ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. இருப்பினும், இவை வெட்டவெளியில் விழுந்ததால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை ஈராக் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதோடு, தீவிர விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.பக்தாத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தெற்கு ஈராக்கின் பஸ்ரா மாகாணத்தில் உள்ள அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிபொருள் நிறுவனம் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அந்த இடத்தில் புகை மண்டலம் காணப்படுவதாக அல்ஜெசீரா செய்தி நிறுவனம் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டித் தெரிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக பாக்தாத் விமான நிலையப் பகுதி தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக, கடந்த மூன்று நாட்களில் மட்டும் பல ஆளளில்லா வானூர்தி தாக்குதல்கள் இப்பகுதியில் பதிவாகியுள்ளன.மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில், ஈராக்கில் அமெரிக்க மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்தத் தாக்குதல்கள் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *