சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பிரதேசங்களிலும் திடீர் சோதனை!

4 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்திலுள்ள, சகல உணவகங்களும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் காரைதீவு மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரிகளின் வழிகாட்டலில் (24) காரைதீவு மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர் தலைமையில், உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா உள்ளிட்ட நிந்தவூர், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் குறித்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, உணவகங்களின் சமையலறைகள், களஞ்சிய அறைகள் மற்றும் உணவு தயாரிக்கப்படும், பரிமாறப்படும் இடங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. இதன்போது சுகாதார சீர்கேடான முறையில் உணவுப் பொருட்களைக் கையாளுதல், பழைய எண்ணெயைப் பயன்படுத்துதல், மற்றும் சமைப்பதற்குப் பொருத்தமற்ற பிளாஸ்டிக் பாத்திரங்கள், துருப்பிடித்த இரும்புத் தட்டுகள் (rusty iron trays) போன்றவற்றில் உணவுகளைத் தயாரித்தல் கண்டறியப்பட்டது. அத்துடன் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மற்றும் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட பெருமளவிலான உணவுகளும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

இதேவேளை சுகாதார விதிகளை மீறி மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட 04 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், உணவக உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சுகாதார விதிமுறைகள், உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சுத்தமான சூழல் பராமரிப்பு குறித்து தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *